
ஆம்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாயிற்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபர், வீட்டிற்கு வந்தபோது 200-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜலால்பேட்டை 3-வது தெருவைச் சேர்ந்தவர் வசியுல்லா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்லம் என்பவரும் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வசியுல்லா மற்றும் அஸ்லம் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரையிலான பணத்தை மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்கள், தலைமறைவான இருவரையும் பல இடங்களிலும் தேடிய வந்தனர். இதையடுத்து இன்று, வசியுல்லா ஜலால்பேட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ஏலச்சீட்டில் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வசியுல்லாவை கைது செய்து அவரை பொதுமக்களிடம் இருந்து பாதுகாப்பாக காவல்நிலைத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுதது வசியுல்லா மற்றும் அஸ்லம் மீது ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து புகார் அளித்துவருவதால் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/156787/Fraud-of-crores-by-conducting-auctions--Citizens-besieged-the-person-who-came-home.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post