Translate

இந்த வலைப்பதிவில் தேடு

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்: இவ்வளவு அவசரம் ஏன்? - எம். விஜயபாஸ்கர் சாடல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 அரசு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம். அதன் பின்பு இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையினரும் பொறுப்பற்ற முறையில் அவசரம் காட்டியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் முறையான நீதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் பிலிபட்டியில் உயிரிழந்த மாணவிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டபோது அத்தகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

image

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறுகையில், 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே முதல் காரணம் என்றும், அதன்பின்பு இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடு மிகவும் வேதனை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றும், மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் வருவதற்குள் உடற்கூறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன என்றும், இந்த விஷயத்தில் அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இவ்வளவு அவசரம் காட்டவேண்டிய தேவை என்ன என்றும், இதை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்; இந்த சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

image

மேலும் விஜயபாஸ்கர் ஒரு பேசுகையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை இரண்டு லட்சம் என்பது போதாது. அரசு 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி தொகை உடனடியாக வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதனைத்தான் வன்மையாக கண்டிப்பதாகவும் சோகத்தில் உள்ள கிராம மக்களுக்கு ஆறுதல் அளிக்கவேண்டிய அரசும் காவல்துறையினரும் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். பெற்றோர்களின் சாபம் சும்மா விடாது என்று அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/155583/M-Vijayabaskar-questions-government-about-Pudukkottai-students-death.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post