
மொட்டை மாடியில் பாடம் படித்து வரும் அரசுப்பள்ளி மாணவர்கள். பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டதால் வாடகை வீட்டில் தொடரும் வகுப்பறை இதனால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அரசுப்பள்ளி கட்டட சுவர்களில் விரிசல் அடைந்து இடிந்த நிலையில், பயன்படுத்த முடியாமல் இருந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தொடரும் வகையில், அருகில் உள்ள இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரம் உள்ள மற்றொரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து 3 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மொட்டை மாடி வகுப்பறைக்குச் சென்று அங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு பதில் அங்கு தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை, இதனால் அரசு பள்ளியில் தொடக்க கல்வியை பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே உடனடியாக பாலிகானப்பள்ளி கிராமத்தில் புதிய அரசுப் பள்ளி கட்டடத்தை கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/154305/Krishnagiri-Build-the-demolished-government-school-building-quickly-Students-are-worried.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post