Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனிக்குமார். சுபஸ்ரீ தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் குழந்தை உள்ளது. இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சுபஸ்ரீக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலென்ஸ் என்ற யோகா பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த அவர், 7 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் 18 ஆம் தேதி அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் பழனிகுமார் வந்தபோது சுபஸ்ரீ காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் காலை 9 மணிக்கே மையத்தை விட்டு வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

image

இதனிடையே போலீசார் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செம்மேடு அருகே சுபஸ்ரீ ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைத்து காணாமல் போன சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான சுபஸ்ரீயின் சடலம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு அய்வுக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

image

உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சுபஸ்ரீ உயிரிழந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், நுரையீரல் நீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் எந்த வித காயங்களும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சுபஸ்ரீ உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/153274/Body-of-woman-who-went-missing-while-returning-from-training-at-Isha-Yoga-Center-recovered.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post